Wednesday 16, Apr 2025

728x90 AdSpace

Latest News
    Wednesday, April 21, 2010

    Blank இது போதும் எனக்கு

    அதிகாலை ஒலிகள்
    ஐந்துமணிப் பறவைகள்
    இருட்கதவுதட்டும் சூரியவிரல்
    பள்ளியெழுச்சி பாடும்உன்
    பாதக்கொலுசு
    உன் கண்ணில் விழிக்கும்
    என் கண்கள்

    இதுபோதும் எனக்கு

    தண்ணீர் போலொரு வெந்நீர்
    சுகந்தம் பரப்பும் துவாலை
    குளிப்பறைக்குள் குற்றாலம்
    நான் குளிக்க நனையும் நீ

    இதுபோதும் எனக்கு

    வெளியே மழை
    வேடிக்கை பார்க்க ஜன்னல்
    ஒற்றை நாற்காலி
    அதில் நீயும் நானும்

    இதுபோதும் எனக்கு

    குளத்தங்கரை
    குளிக்கும் பறவைகள்
    சிறகு உலர்த்தத்
    தெறிக்கும் துளிகள்
    முகம் துடைக்க உன் முந்தானை

    இதுபோதும் எனக்கு

    நிலா ஒழுகும் இரவு
    திசை தொலைத்த காடு
    ஒற்றையடிப்பாதை
    உன்னோடு பொடிநடை

    இதுபோதும் எனக்கு

    மரங்கள் நடுங்கும் மார்கழி
    ரத்தம் உறையும் குளிர்
    உஷ்ணம் யாசிக்கும் உடல்
    ஒற்றைப் போர்வை
    பரஸ்பர வெப்பம்

    இதுபோதும் எனக்கு

    நிலாத் தட்டு
    நட்சத்திரச் சோறு
    கைகழுவக் கடல்
    கைதுடைக்க மேகம்

    கனவின் விழிப்பில்
    கக்கத்தில் நீ

    இதுபோதும் எனக்கு

    தபோவனக் குடில்
    தரைகோதும் மரங்கள்
    நொண்டியடிக்கும் தென்றல்
    ஆறோடும் ஓசை
    வசதிக்கு ஊஞ்சல்
    வாசிக்கக் காவியம்
    பக்க அடையாளம் வைக்க
    உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

    இதுபோதும் எனக்கு

    பூப்போன்ற சோறு
    பொரிக்காத கீரை
    காய்ந்த பழங்கள்
    காய்கறிச் சாறு
    பரிமாற நீ
    பசியாற நாம்

    இதுபோதும் எனக்கு

    மூங்கில் தோட்டம்
    மூலிகை வாசம்
    பிரம்பு நாற்காலி
    பிரபஞ்ச ஞானம்
    நிறைந்த மௌனம்

    நீ பாடும் கீதம்

    இதுபோதும் எனக்கு

    அதிராத சிரிப்பு
    அனிச்சப்பேச்சு

    உற்சாகப்பார்வை
    உயிர்ப் பாராட்டு

    நல்ல கவிதைமேல்
    விழுந்து வழியும் உன்
    ஒரு சொட்டுக் கண்ணீர்

    இருந்தால் போதும்
    எதுவேண்டும் எனக்கு?
    • Blogger Comments
    • Facebook Comments

    4 comments:

    1. kavingarin rathathil ooriya thamizh.....,
      paenaa vazhi kasindhu
      engal vizhi nuzhaindhu
      kavippasi theerkkkum dheerkkamaana
      kaadhal kavidhai......!!!!

      enn
      thamizh kaadhal
      maenmai pera
      idhu podhum enakku....!!!!!

      ReplyDelete
    2. எனக்கும் போதும் இந்த கவிதை .

      ReplyDelete
    3. கவிதை வரிகள் கனவிலும் மறக்காது அய்யா மனநிறைவு

      ReplyDelete
    4. ஒவ்வொரு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ரசிக்கலாம்

      ReplyDelete

    Item Reviewed: இது போதும் எனக்கு Rating: 5 Reviewed By: Blank